Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையிலிருந்து ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த புனே வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தப்பி சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள குமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு தனிப்பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் சவூதியில் இருந்து திரும்பிய புதுக்கடை பகுதியை சேர்ந்த பால்ராஜ், துபாயில் இருந்து திரும்பிய செருப்பலூர் மணி ஆகியோருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேபோல் கன்னியாகுமரி லாட்ஜில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய சுகாதார துறையினர் அங்கு பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் தங்கியிருந்த மஜின் என்ற புனே வாலிபரை அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இவர்கள் 3 பேரின் சளி மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த மஜின் யாருடனும் பேசாமல் இறுக்கமாக இருந்து வந்துள்ளார். பரிசோதனை முடிவு குறித்து பதட்டத்துடன் மருத்துவமனை ஊழியர்களிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை யாருக்கும் தெரியாமல் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவி்ட்டார். வார்டுக்கு சென்ற மருத்துவர்கள் அங்கு மஜின் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர். மேலும் மற்ற 2 பேரும் தப்பியோட விடாதபடி மருத்துவமனை நிர்வாகம் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது.

நெல்லையில் 3 பேருக்குப் பாதிப்பு

நெல்லையில் பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ள மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த பேச்சிமுத்து, என்ற வாலிபருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது சளி, ரத்தம் ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதே போல் மேலும் 2 சிறுவர்களும் தொடர் காய்ச்சலால் பாளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த பகுதிக்கு செல்பவர்கள் அனைவரும் முகமுடி அணிந்தே செல்கிறார்கள். பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்தும் தற்போது நெல்லைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

தற்போது நெல்லை மாவட்டத்திலும் இந்நோய் தாக்குதல் பரவியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றி வளர்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால், பன்றிகளை பிடித்து வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மத்திய குழு ஆய்வு

இந்த நிலையில், பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைள், சிகிச்சை நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆராய மத்திய மருத்துவக் குழு தமிழகம் வந்துள்ளது. சென்னை தண்டையார்ப்பேட்டை மருத்துவமனையைப் பார்வையிட்ட இக்குழுவினர், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதுதொடர்பாக மாநிலம் தோறும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி ஆய்வு செய்யப்படுகின்றன.

தமிழகத்திற்கான குழு நேற்று மாலை வந்தது. மத்திய சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் சுதிர், மத்திய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அரவிந்த், குப்தா ஆகியோர் நேற்று சென்னையில் 3 இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் அவர்களுடன் சென்றனர். தமிழ்நாடு-புதுவை சுகாதார முதன்மை மண்டல இயக்குனர் பழனிவேல் உள்பட சில அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் ஆஸ்பத்திரி, கிண்டியில் உள்ள கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், தண்டையார்ப்பேட்டை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய குழு திருப்தி தெரிவித்துள்ளது என்றார்.

இதேபோல புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மேலும் பல மருத்துவமனைகளுக்கம் இந்தக் குழு செல்லவுள்ளது.

சோதனைக்காக அலைமோதும் மக்கள்

இதற்கிடையே, மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்காக மக்கள் கூட்டம் சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டுக்குப் படையெடுத்த வண்ணம் உள்ளது. பன்றிக் காய்ச்சல் இருக்கிறதா என்பதை சோதனை செய்யும் வசதி இங்கு மட்டும்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருப்போர், முன்னெச்சரிக்கையாக தெரிந்து கொள்ள விரும்புவோர் என மக்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்த மாதிரிகளைக் கொடுத்து செல்கிறது.

பெரும்பாலானோர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். ஆனால் இந்தக் கழகத்தில் போதிய ஊழியர்கள் இல்லை. ஒரே ஒரு கவுண்டர்தான் உள்ளது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து ரத்த மாதிரிகளைத் தர வேண்டியிருப்பதாக மக்கள் குறை கூறுகிறார்கள்.

தடுப்பது எப்படி - மக்களுக்கு டாக்டர்கள் விளக்கம்

இதற்கிடையே, பன்றிக் காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது எப்படி என்பது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

பன்றி காய்ச்சல் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது.

இதில் டீன் டாக்டர் வி.கனகசபை, சிறப்பு டாக்டர்கள் சிவசுப்பிரசங்கர், வெங்கடேஷ், ஜோசப் நவசீலன், ஆனந்த மோசஸ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.

பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கும், அவர்களுடன் நெருங்கி பழகுவோருக்கும் இந்த நோய் வரும் அபாயம் உள்ளது. தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை பன்றி காய்ச்சல் அறிகுறிகள் ஆகும். இவை எல்லாம் இருப்பதாலேயே பன்றி காய்ச்சல் என்று நினைத்து பயப்படத்தேவையில்லை.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பன்றி காய்ச்சல் என்றவுடன் பொதுமக்கள் பீதி அடைந்து விடுகிறார்கள். சாதாரண காய்ச்சல் போலதான் இதுவும். இந்தியாவில் ஏற்கனவே, எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இருக்கின்றன. இவற்றை விடவும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி விடாது.

நோயை தடுப்பதற்கான டமிப்ளூ மாத்திரைகள் மருத்துவமனைகளில் போதிய அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. நோய் வந்தாலும் 10 அல்லது 15 நாட்கள் மருத்து சாப்பிட்டால் குணமாகிவிடும். இந்த நோய் ஆரம்பத்தில் பன்றிகள் மூலம் பரவி இருக்கலாம். தற்போது ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுகிறது. இருமல், தும்மல், துணி மூலம் மற்றவர்களுக்கு பரவும்.

சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, வாந்திபேதி, பசியின்மை, தலைவலி, உடல்வலி ஆகியவை பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். பொதுவாக, 6 மாதம் முதல் 10 மாதம் வரை உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோரை இந்த நோய் எளிதில் பாதிக்கும்.

குழந்தைகளுக்கான சிறப்பு அறிகுறிகள் என்று பார்த்தால் இடைவிடாமல் காய்ச்சல் இருக்கும். உடல் நீல நிறமாகும். பசி எடுக்காது. பெரியவர்கள் என்றால் குழப்பமுடன் காணப்படுவார்கள். மூச்சுத்திணறல் ஏற்படும். தொடர்ந்து வாந்தி இருக்கும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களிடம் இருந்து நோய் பரவாமல் இருக்க சில தடுப்புமுறைகளை மேற்கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கு தெரியாதபடி முகமூடி அணிந்துகொள்ள வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவரின் பொருட்களையோ, துணிமணிகளையோ பயன்படுத்தக் கூடாது என்று அப்போது டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஜி.எச்சில் 24 மணி நேர கண்காணிப்பு- சிறப்பு வார்டுகள்

இந்த நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரக் கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், மற்ற நோயாளிகளுக்கு பரவி விடாமல் தடுப்பதற்காகவும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, சென்னை தலைமை மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தண்டையார்பேட்டை மருத்துவமனை சிறப்பு வார்டு 54 படுக்கைகளுடனும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை 10 படுக்கைகளுடனும், சென்னை மருத்துவமனை 5 படுக்கைகளுடனும் இயங்கி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+