இது ஒரு நீண்ட பயணம்-எதியூரப்பா
சென்னை:

சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னரின் சிலையைத் திறந்து வைத்து கர்நாடக எதியூரப்பா பேசுகையில்,
மொழி கன்னடம் ஆனாலும் தமிழ் ஆனாலும் எண்ணம் ஒன்றே. நாமெல்லாம் இந்தியர்கள்.
இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தினம். இரு மாநில ஒற்றுமைக்கு இது ஒரு புதிய அத்தியாயம். இது ஒரு நீண்ட பயணம். இந்த சிலைகள் இரு மாநிலங்களுக்கான நட்புப் பாலம்.
இந்த ஒற்றுமை மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரி. தமிழகம்-கர்நாடகம் இடையிலான உறவு மிக நீண்டது. ஜனாதிபதியாலும் பிரதமராலும் சந்திக்கப்பட்ட இந்தப் பிரச்சனையை அண்ணன் கருணாநிதியுடன் சேர்ந்து இந்தத் தம்பி தீர்த்து வைத்தது மாபெரும் மகி்ழ்ச்சி.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த சிக்கலைத் தீர்த்துள்ளோம். தமிழக, கர்நாடக மக்கள் சகோதரர்களே என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்த தினம் என் வாழ்வு முழுவதும் நினைவில் இருக்கும் நாள். இந்த நாளுக்காக நன்றி.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதைத் தீர்க்க முடியும். விவேகத்துடன் கூடிய அணுகுமுறை மட்டுமே தேவை என்பதை இந்த விழா நிரூபித்துள்ளது.
தமிழக மக்களும், கர்நாடக மக்களும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதர, சகோதரிகள் என்பதை இந்த விழா நிரூபித்துள்ளது.
பெங்களூர் நிகழ்ச்சியின்போது என்னை அன்போடு தம்பி என்று முதல்வர் கருணாநிதி அழைத்தபோது நான் உணர்ச்சிக் களிப்பில் மூழ்கினேன். 2 ஆண்டுகளுக்கு முன் என் அண்ணனை இழந்தேன். இப்போது கலைஞர் கருணாநிதியின் உருவின் எனக்கு என் மூத்த அண்ணன் திரும்பிக் கிடைத்துள்ளார் என்றார் எதியூரப்பா.
எதியூரப்பாவின் பேச்சை மத்தூர் கிருஷ்ணமூர்த்தி மிக அழகாக தமிழில் மொழி பெயர்த்தார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்-அன்பழகன்:
விழாவில் நிதியமைச்சர் அன்பழகன் பேசுகையில்,
இந்த நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி பெங்களூரில் நடந்த தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா கலந்து கொண்ட திறந்து வைத்த திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சி.
அங்கு அண்ணனுக்கு பெருமை. இங்கு தம்பிக்கு. அங்கு 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு சிலை திறக்கப்பட்டது. இங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பாக சமத்துவத்துக்காக, நீதிக்காக, நியாயத்துக்காக, உண்மைக்காக, பசியால் வாடியவர்களுக்காக கருத்துக்களை சொன்ன சர்வக்ஞர் சிலை திறக்கப்படுகிறது.
எல்லா காலத்திலும் எந்த கவிஞராக இருந்தாலும் அவர்களை பாராட்டும் பெருமை தமிழகத்துக்கு உண்டு. கவிஞர் சொல்வதை கேட்பது தான் தமிழர்களின் வழக்கம். அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தமிழர்கள் பார்ப்பது இல்லை. தமிழக மக்கள் பெரியார், அண்ணா ஆகியோரின் பேச்சுகளால் பக்குபவப்பட்டு வந்தவர்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்றவராக வாழ்ந்தவர் சர்வக்ஞர். அவர் ஒரு ஊரில் பிறந்தாலும், அந்த ஒரு ஊருக்காக மட்டும் வாழவில்லை. அவர் எல்லாம் துறந்தார். யாதும் ஊரே என நடந்தார். அனைவரிடமும் அன்பு செலுத்தினார்.
துறவுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த அவர் புரட்சிக்கரமான கருத்துக்களை சொன்னவர். இறைவன் ஒருவன் என்பதை சொன்ன அவர் ஆத்தீக உணர்வு பெற்றவராக தெரிந்தாலும் நாத்திகத்தையும் ஏற்றவர் என்று சொல்லலாம். அவரது சாதி மறுப்பு செய்தவர். உயர்ந்தோர், தாழ்த்தோர் என்ற பேதமில்லை. எல்லோரும் ஒன்று என்ற கருத்துக்களை கூறியவர்.
அவரது கவிதைகள் அனைத்தும் மூன்று வரிகளை கொண்டது. அதை கன்னடத்தில் திரிவதி என்று சொல்கிறார்கள். அவர் எழுதிய திரிவதங்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. சிலர் 70 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரம் என சொல்கின்றனர். அவர் ஏராளமாக பாடினார். ஆனால், அதில் குறைவாக தான் கிடைத்துள்ளது.
தமிழர்கள் மனதில் இடம் உண்டு...
தமிழில் திருவள்ளுவர் 133 அதிகாரங்களில், 1330 குறள் எழுதியுள்ளார். இதில் உள்ள எண்களை கூட்டினால் 7 தான் வருகிறது. தமிழகத்தின் மக்கள் மனதில் சர்வக்ஞருக்கு எப்போதும் இடம் உண்டு. வள்ளவருக்கு உலகம் முழுவதும் இடம் உண்டு.
திருவள்ளுவர் சொன்ன கருத்துக்களை சர்வக்ஞர் தெளிவாக கூறியுள்ளார். அவர் புதுமை எண்ணங்களுக்கு வித்திட்டவர். அவரது சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா திறந்து வைத்து பெருமை கொள்ள செய்கிறது.
இன்றும் வாழ்விலோர் திருநாள் தான்...
பெங்களூரில் 9ம் தேதி கலைஞர் இன்று வாழ்விலோர் திருநாள் என்று சொன்னார். இன்றைக்கும் வாழ்விலோர் திருநாள் தான். இது போன்ற நிகழ்ச்சிகள் என்றைக்கும் வாழ்விலோர் திருநாள் தான். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவி்த்து கொள்கிறேன்.
கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் இடையை நல்ல உறவு தழைக்க, சூழ்நிலை உருவாக இந்த நிகழ்ச்சிகள் உதவும். இதற்காக எதியூரப்பாவுக்கும், கர்நாடக அரசுக்கும், தமிழக அரசு, முதல்வர் மற்றும் மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சர்வக்ஞர் சிந்தனை வாழ்க, வளர்க என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications