சென்னை கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.1000 கோடி
டெல்லி: சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மும்பையின் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் மத்திய அரசு ரூ. 2,200 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி கூறினார்.
டெல்லியில் நகர்ப்புற நீர்வள விருதுகள் வழங்கும் விழாவில் ஜெய்ப்பால் ரெட்டி பேசுகையில்,
நாட்டின் இரண்டு பெரிய நகரங்களுக்கு மிகப்பெரிய திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மும்பை நகரி்ன் வெள்ள பிரச்சனைகளை தீர்க்க பிரகன் மும்பை வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் ரூ. 1,200 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
மற்றொரு திட்டம் சென்னையில் செயல்படுத்தப்படுகிறது. இங்கு ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மூலம் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு திட்டங்களும் முடிவடைந்த பின்னர் மும்பையில் வெள்ளப் பெருக்கு பிரச்சனையும், சென்னையின் குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க செய்வதை எங்கள் அமைச்சகத்தின் முதல் வேளை. தற்போது நாடு முழுவதும் குடிநீர் வழங்குவது தொடர்பாக 969 சிறு மற்றும் நடுத்தர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 828 திட்டங்கள் சுகாதாரம் தொடர்பானவை. நீர்தேக்கங்களை பாதுகாக்க அரசு ரூ. 116 கோடி ஒதுக்கியுள்ளது என்றார் ஜெய்ப்பால் ரெட்டி.
ரூ. 54 ஆயிரம் கோடி தேவை...
அவரை தொடர்ந்து ஜனாதிபதி பிரதிபா பாடீல் பேசுகையில்,
அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்து ரூ. 54 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இன்னும் நாட்டின் பல நகரங்களில் உள்ள மக்களுக்கு ஒரு நாளின் சராசரி தேவையான 135 லிட்டர் நீர் கிடைப்பதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications