For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி காலத்தை கடத்துகிறார்-ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற சேலம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் என கோரி சேலம் மாநகராட்சி முன்பு வரும் 19ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2006-07ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் சேலம் மாநகராட்சிக்கு தனி குடிநீர் வினியோகத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2007-08ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பிலும் சேலம் மாநகருக்கு தனியாக குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் 2008-2009ம் ஆண்டில், தனிக் குடிநீர்த் திட்டப் பணியும், பாதாள சாக்கடை திட்டப் பணியும் இவ்வாண்டு செயலாக்கத்திற்கு எடுக்கப்பட உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியாக 2009-2010ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பிலே, சேலம் மாநகராட்சிக்கு விரிவான குடிநீர் விநியோகத் திட்டம் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை பொறுத்த வரையில் ஒப்பந்தப் புள்ளி பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலத்தை கடத்துகிறார் கருணாநிதி...

ஒவ்வொரு ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பிலும் வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு காலத்தை கடத்திவிட்டார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி. அடுத்த ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்படி திட்டங்களுக்கான பணிகள் துவங்கப்பட உள்ளன என்று சொல்லப் போகிறார் போலும்.

இந்தத் திட்டங்கள் மட்டுமல்ல, திமுக அரசால் அறிவிக்கப்படும் பெரும்பாலான திட்டங்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றன.

சேலம் மாநகர தனி குடிநீர்த் திட்டத்தைக் காரணம் காட்டி, கட்டணத்தின் வைப்புத் தொகையை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 ஆயிரத்து 500 ஆகவும், குடிநீர்க் கட்டணத்தை ரூ. 101லிருந்து ரூ. 151 ஆகவும் உயர்த்திவிட்டார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி. ஆனால் திட்டம் துவங்கப்படவே இல்லை.

மக்கள் மிரட்டப்படுகின்றனர்...

திமுக அரசின் இது போன்ற செயல்பாடுகள் காரணமாக, சேலம் மாநகர மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டுக் கொண்டு இருப்பதாகவும், சேலம் மாநகரின் பல பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடுகின்ற மக்கள் காவல் துறையினர் மூலமாகவும், திமுக ரவுடிகள் மூலமாகவும் மிரட்டப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சேலம் மாநகர மக்களின் முக்கியத் தேவைகளான தனி குடிநீர்த்திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், கிச்சிப்பாளையத்தில் உள்ள குப்பை மேட்டை மாற்றும் திட்டம் ஆகியவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ள சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசை கண்டித்தும், மேற்படி திட்டங்களை உடனடியாக நிறைவேற்றவும், சேலம் மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதிமுக சேலம் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் 19.8.2009 புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் சேலம் மாநகராட்சி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதிமுக அமைப்புச் செயலாளர் சு.முத்துசாமி தலைமையிலும், சேலம் மாநகர் மாவட்ட கட்சி செயலாளர் எம்.கே.செல்வராஜ் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என் அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X