சென்னையில் பெண் படுகொலை-நகைகள் கொள்ளை
சென்னை: சென்னையில் ஏர்டெல் அலுவலகததில் பணியாற்றி வந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டு 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த செந்தில்குமார் (28) சாந்தோமில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (26) தியாகராய நகரில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இருவரும் காதல் திருணம் செய்தவர்கள். இவர்களுக்கு வந்தனா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
செந்தில்குமாரின் பெற்றோரும் இதே வீட்டில் தான் வசித்து வருகின்றனர். அவர்கள் ஒரு அறையிலும் செந்தில்குமார், ஜெயஸ்ரீ, குழந்தை இன்னொரு அறையிலும் தூங்குவது வழக்கம்.
நேற்று நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை யாரோ தட்டவே ஜெயஸ்ரீ கதவை திறந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் ஜெயஸ்ரீயை வெளியே இழுத்தது.
முகத்தைப் பொத்தி அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
காலை 5 மணியளவில் எழுந்த செந்தில்குமார் மனைவியை வீடு முழுவதும் தேடிவிட்டு திறந்து கிடந்த பின் பக்கம் வந்தபோது வெட்டுக் காயங்களுடன் ஜெயஸ்ரீ கொலை செய்யபட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயஸ்ரீயின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் தாலி கிடந்தது. கொள்ளையர்கள் நகைகளை அறுத்துச் சென்றபோது அது தவறி விழுந்திருக்கலாம் என்று தெரிகிறது.
சம்பவ இடத்தை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரில் பார்வையிட்டார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயஸ்ரீயின் கணவர் செந்தில்குமாரிடமும், மாமனாரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications