பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவது அவமானம் - தா.பாண்டியன்
தூத்துக்குடி: தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் பண்பாடுகளை இழந்து விடக் கூடாது. தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவது அவமானம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசினார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டசபை இடைத்தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியதாவது...
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் பண்பாடுகளை இழந்து விடக் கூடாது. தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவது அவமானம்.
எம்.ஜி.ஆர்.காலம் முதலே எங்களுக்கு அ.தி.மு.க -வுடன் நல்ல உறவு உள்ளது. எனவே இந்த தேர்தலில், அ.தி.மு.க தொண்டர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். அவர்கள் அந்த தார்மீக கடமையிலிருந்து மீறக்கூடாது.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் போலீஸ் துறையின் ஈரல் 80 சதவீதம் கெட்டு விட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் அத் துறை ஈரல் 100 சதவீதம் கெட்டு விட்டதாகவே தோன்றுகிறது. சமூக விரோதிகளோடு போலீசார் கைகோர்த்து செயல்படுகின்றனர்.
திமுக-வினரின் விதிமுறை மீறல்களுக்கு எதிராக இப்போதைக்கு தடியெடுக்க மாட்டோம். தேவைப்பட்டால் அது குறித்து பின்னர் யோசிப்போம் என்றார்.