ஜஸ்வந்த் சிங்கின் நூல் வெளியீடு-பாஜக தலைவர்கள் புறக்கணிப்பு
டெல்லி: ஜின்னா குறித்து பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்த கருத்துக்களை நிராகரித்ததன் பின்னணியில், ஜஸ்வந்த் சிங் எழுதிய ஜின்னா குறித்த நூல் வெளியீட்டு விழாவை பாஜக தலைவர்கள் புறக்கணித்தனர்.
Jinnah: India-Partition Independence என்ற தலைப்பில் ஜஸ்வந்த் சிங் நூல் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கட்சித் தலைமையக பொறுப்பாளர் ஷியாம் ஜாஜு மட்டுமே கலந்து கொண்டார். வேறு எந்த பாஜக தலைவரும் விழாவில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இந்தியாவின் பிரிவினைக்கு சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் என்று கூறுவதும், ஜின்னாவைப் புகழ்ந்து பேசுவதும் பாஜகவின் கொள்கைகளுக்கு முரண்பாடானது. அதை ஏற்க முடியாது என்றார்.
அதேபோல ஜின்னாவை தனது நூலில் ஜஸ்வந்த் சிங் புகழ்ந்திருப்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கண்டித்துள்ளது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் கூறுகையில், நான் புத்தகத்தின் சில பகுதிகளை மட்டுமே படித்துள்ளேன். இருப்பினும் பிரிவினைக்கு ஜின்னா காரணமல்ல என்று கூறுவதை ஏற்க முடியாது. அது உண்மைக்கு மாறானது என்றார்.
தனது நூலில் இந்தியா, பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு முக்கிய காரணமே ஜவஹர்லால் நேருவும், படேலும்தான் காரணம். ஆனால் பழி ஜின்னா மீது விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.
ஜஸ்வந்த் சிங்கின் இந்தக் கூற்றுக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவை அவர்கள் புறக்கணித்து விட்டனர்.
ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு அத்வானி பாகிஸ்தான் போயிருந்தபோது ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர் என்று கூறி ஆர்.எஸ்.எஸிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
பால் தாக்கரேவும் பாய்ச்சல்:
பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைத் தொடர்ந்து, ஜஸ்வ்நத் சிங் மீது பால் தாக்கரேவும் பாய்ந்துள்ளார்.
ஜின்னாவைப் புகழ்வது என்பது இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயல் என்று அவர் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், ஜின்னாவைப் புகழ்ந்து பேசி தொடர்ந்து பாஜக தலைவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதித்து வருகின்றனர்.
2005ம் ஆண்டு அத்வானி, ஜின்னாவை மதச்சார்பற்ற தலைர் என்றார். இப்போது ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் புகழ்ந்து பேசுகிறார்.
ஜின்னாவைப் புகழ்ந்ததன் மூலம் கொள்கைக் குழப்பத்தை உருவாக்கினார் அத்வானி. அதை இப்போது பெரிதுபடுத்தியிருக்கிறார் ஜஸ்வந்த் சிங். பாஜகவில் காணப்படும் இந்தக் கொள்கைக் குழப்பத்தால்தான் இந்துக்கள் வெறுத்துப் போயுள்ளனர். இது லோக்சபா தேர்தலிலும் எதிரொலித்தது.
முஸ்லீம்களுக்காக தனி நாடு கோரிய ஒருவர் எப்படி மதச்சார்பற்றவராக இருக்க முடியும்?. ஒரு வேளை ஜின்னா மதச்சார்பவற்றவராக இருந்திருந்தால், அத்வானி ஏன் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார்? என்று கேட்டுள்ளார் தாக்கரே.