கழிவு நீர்-ஊட்டியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் அணைகளில் கலக்கப்படுகிறது. இதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசை கண்டித்து வரும் 21ம் தேதி அதிமுக சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழிற்சாலையில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறதா, சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள சாதனங்களின் செயல்திறன் சீரிய முறையில் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு உண்டு.
ஆனால், திமுக அரசு தொழிற்சாலை மாசு கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவாக, கழிவுநீர் ஆற்று நீருடன் கலந்துவிடும் நிலைமை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சி சாண்டிநல்லா பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் இருந்தும், இந்து நகரில் இயங்கி வரும் சிட்கோ தொழிற்சாலையில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக காமராஜர், கிளன்மார்கன் மற்றும் பைக்காரா அணைகளில் கலந்து விடுகிறது.
70 கிராமங்களில் தொற்றுநோய்...
இதன் காரணமாக மேற்படி அணைகளில் இருந்து வரும் நீரைப் பயன்படுத்தும் 70க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அணைகளில் உள்ள மீன்கள் நாள்தோறும் செத்து மடிந்து கொண்டிருப்பதாகவும், தலைகுந்தா, சாண்டிநல்லா, சோலூர், பைக்காரா, கிளன்மார்கன், மசினகுடி மற்றும் மயார் பகுதிகளில் சுற்றுப்புற சூழல் மாசுபட்டு துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர, சாண்டிநல்லா பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் அதிகமாக கசிவதன் காரணமாக, அங்குள்ள பல குடியிருப்புகளும், வழிபாட்டுத்தலங்களும் இடிந்துள்ளன.
மேலும் பல குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், இதன் காரணமாக பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஊட்டி நகராட்சிப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கூட சுத்திகரிப்பு செய்யப்படாமல் அணைகளில் கலப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்தப் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து முறையிட்டும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை...
எனவே, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக அணைகளுக்கு திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் திமுக அரசை கண்டித்தும், அப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிப்பது மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.
அதிமுக நீலகிரி மாவட்டக்கழகத்தின் சார்பில் 21.8.2009 அன்று காலை 11 மணிக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தேர்தல் பிரிவுச்செயலாளர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையிலும், நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர் எம். செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெறும் என் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications