புதிய சட்டசபை வளாகம் - அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை

சென்னை அரசினர் தோட்டத்தில் புதிதாக தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை முதல்வர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
மார்ச் மாதத்துக்குள் கட்டி முடித்து, அடுத்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரை புதிய கட்டிடத்தில் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தற்போது கட்டிடப்பணிகள் 4 மாடியைத் தாண்டி விட்டது. ஒவ்வொரு மாடியிலும் சுற்றுச்சுவர் மற்றும் உள் அறைகள் கட்டும் பணி நடக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு கட்டட பணிகளை முதல்வர் கருணாநிதி நேரில் பார்வையிட்டார். இன்று அவர் கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
எம்.எல்.ஏ.க்களுக்கான இருக்கை வசதி எப்படி இருக்க வேண்டும், மற்ற மாநிலங்களில் புதிய சட்டமன்ற கட்டிடங்களில் எவ்வாறு நவீன வசதிகளுடன் உள்ளது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், டான்சி அதிகாரிகள் கட்டிட கலை நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications