வேதம் படிப்போருக்கு அரசியல் கூடாது-எஸ்.வி.சேகர்
காரைக்கால்: வேதம் படிப்பவர்கள் அதில் சிறப்பாக தேர்வு பெற்று தேற வேண்டும். அவர்களுக்கு நிச்சயம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நல்லவேலை வாய்ப்பு உள்ளது. வேதம் படிப்பவர்கள் அரசியல் ஆசையை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் எந்தக் கட்சியையும் சாராத எம்.எல்.ஏவான எஸ்.வி.சேகர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாச்சார்ய வேதசிவாகம வித்யா பீடத்தின் 13-வது ஆண்டு நிறைவு விழா, 4 ஆண்டு வேதசிவாகமம் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வேதசிவாகம சமஸ்கிருத ஸதஸ் மற்றும் ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாச்சார்ய ஆராய்ச்சி நிறுவன தொடக்க விழா என முப்பெரும் விழா நடத்தப்பட்டது.
விழாவின் முதல் நாளன்று வேதசிவாகம சமஸ்கிருத சைவத்தமிழ் மாநாடு தொடக்க விழா நடைபெற்றது. ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாச்சார்ய டிரஸ்ட் ஆலோசகர் ஆடிட்டர் கணபதி சுப்பிரமணியம் வரவேற்றார்.
எஸ்.வி. சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் சேகர் பேசுகையில்,
வேதம் படிக்கும் மாணவர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தேவையில்லை. நீங்கள் ஆன்மீகத்தை பாதுகாப்பதற்கு மட்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்லதொரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
நீங்கள் ஆங்கிலம் பயின்று வேலை வாய்ப்பை தேடி அலைவதற்கு பதிலாக வேதம் பயின்றால் உங்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளிலும் வேலை வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
அதனால் வேலை வாய்ப்பை பற்றி கவலைப்பட வேண்டாம். அரசியல், அரசியல் வாதிகளுடன் இருக்கட்டும். படிப்பு மட்டும்தான் உங்களுக்கு முக்கியம். பிறப்பாலும் தொழிலாலும் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் சமமானவர்கள்தான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications