சென்னை- விமானத்தின் அடியில் சிக்கிய லாரியால் பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிங் பிஷர் நிறுவனத்தின் லாரி ஒன்று, விமானத்தின் அடிப்பகுதியில் போய் மோதி சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மாலை டெல்லியில் இருந்து கிங் பிஷர் விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் மாலை புனேவுக்குப் புறப்படவிருந்தது.
விமானத்தின் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக ஒரு லாரி அங்கு வந்தது. அந்த லாரி, விமானத்தின் அருகே வந்தபோது, விமானத்தின் அடிப்பகுதியில் புகுந்து உரசியபடி சிக்கிக் கொண்டது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிறுவன அதிகாரிகள் விரைந்து சென்று விமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அதிர்ஷ்டவசமாக விமானம் ஒன்றும் ஆகவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் பயணம் செய்யவிருந்த பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.