சைபர் குற்றங்களின் மையமாக மாறுகிறது இந்தியா - ஆய்வு
லண்டன்: இந்தியாவில் சைபர் கிரைம் எனப்படும் இணையதளம் சார்ந்த குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், உலகின் சைபர் கிரைம் செயல்களின் முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரைட்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்தியாவில் கம்ப்யூட்டர் அறிவு படைத்தவர்கள், கிரிமினல்களாக மாறி வருவதாகவும், இணையதளங்களைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள், ஊழல்களை அவர்கள் செய்யத் தொடங்கியிருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
Crime Online: Cybercrime and Illegal Innovation என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடந்து வரும், நடந்த சைபர் கிரைம் செயல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளில் கிடைத்த தகவல்கள் கவலை தருவதாகவும், இந்தியாவில் சமீப ஆண்டுகளில் சைபர் கிரைம் செயல்களில் பெருமளவில் அதிகரித்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஹோவரர்ட் ரஷ் கூறுகையில், ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் சைபர் கிரைம் செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. தற்போது இந்தியாவும் இந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறி வருகிறது. விரைவில் இந்தியா சைபர் கிரைம் செயல்களில் முன்னிலை பெற்றாலும் வியப்பதற்கில்லை.
சைபர் கிரைம் செயல்கள் இந்த நாடுகளில் அதிகரித்து வந்தாலும் கூட, அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு ஐடி நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்தியா, பிரேசில், ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களது பணிகளைக் கொண்டு செல்வதை விடாமல் தொடர்ந்து வருகின்றன. காரணம் இந்த நாடுகளில் கிடைக்கும் மலிவான மனித உழைப்பு, குறைந்த செலவிலான அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவையே என்றார் ரஷ்.