மகாராஷ்டிரா பள்ளி பேருந்தில் தீ-15 குழந்தைகள் காயம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை பள்ளி குழந்தைகள் சென்ற பேருந்து தீப்பிடித்ததில் 15 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலை தடுக்கும் நோக்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டது. இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் ராய்காட் மாவட்த்தில் உள்ள நாவி மும்பையில் உள்ள சி.கே.டி பள்ளிக்கு, குழந்தைகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காலை சுமார் 6.50 மணிக்கு இந்த பஸ் பான்வெல் நகரில் இருந்து 30 கிமீ., தொலைவில் சென்று கொண்டிருந்த போது தீடிரென்று தீ பற்றி கொண்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த குழந்தைகள் பயத்தில் அலறின. இந்த சம்பவத்தில் 15 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், குழந்தைகள் வந்த பஸ்சில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் எஸ்.டி.காட்ஜே கூறுகையில், காயமடைந்த குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பேருந்து குழந்தைகளின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.