காங்கிரஸுடன் கட்சியை இணைக்க சிரஞ்சீவிக்கு எம்.எல்.ஏக்கள் திடீர் நெருக்குதல்!
ஹைதராபாத்: பிறந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. அக்கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுடன் கட்சியை இணைக்க வேண்டும் என்று கோரி சிரஞ்சீவியை நெருக்க ஆரம்பித்துள்ளனராம்.
விஜயகாந்த் பாணியில் ஆந்திராவில் தனிக் கட்சி ஆரம்பித்தவர் சிரஞ்சீவி. ஆனால் விஜயகாந்த் போல ஒரு தொகுதியில் மட்டும் ஜெயிக்காமல், 18 தொகுதிகளில் வென்றார்.
இந்த நிலையில், சட்டசபைத் தேர்தல் முடிந்து 3 மாதமே ஆகியுள்ள நிலையில், பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், கட்சியை காங்கிரஸுடன் இணைக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனராம். இதனால் சிரஞ்சீவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து ஐந்து எம்.எல்.ஏக்களும், சிரஞ்சீவியின் மைத்துனரும், கட்சியின் பொதுச் செயலாளருமான அல்லு அரவிந்த்தை நேற்று இரவு சந்தித்துப் பேசினர். இன்று அதிகாலை வரை பேச்சுவார்த்தை நீடித்ததாம். அப்போது, ஒரு மாத கால அவகாசம் தருமாறும், அதன் பின்னர் முடிவைக் கூறுவதாகவும் கூறி எம்.எல்.ஏக்களை அனுப்பி வைத்துள்ளார் அரவிந்த்.
இந்த விவகாரத்தை கட்சியின் செய்தித் தொடர்பாளர் வசிரெட்டி பத்மா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கட்சியில் சிலர் காங்கிரஸுடனோ அல்லது தெலுங்கு தேசத்துடனோ பிரஜா ராஜ்ஜியம் கட்சியை இணைக்க வேண்டும் என்று விரும்பலாம். ஆனால் சிரஞ்சீவியின் தலைமையில்தான் பிரஜா ராஜ்ஜியம் தொடர்ந்து இயங்கும்.
எனவே எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இணையுமாறு நெருக்குவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. ஒரு சிலர் காங்கிரஸிலோ அல்லது தெலுங்கு தேசத்திலோ இணைய விரும்புவதால் கட்சி இல்லாமல் போய் விடாது. அவர்களை நம்பி பிரஜா ராஜ்ஜியம் இல்லை.
கட்சிக்கு எதிராக எதிர்த் தரப்பினர் கிளப்பி விடும் சதியே இது. பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொடர்ந்து இயங்கும். சிரஞ்சீவி தலைமையில் தொடர்ந்து செயல்படுவோம்.
கட்சியை அடிமட்ட அளவிலிருந்து வளர்க்க சிரஞ்சீவி உறுதி பூண்டுள்ளார் என்றார்.
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் சிரஞ்சீவி கட்சிக்க வெறும் 18 இடங்களே கிடைத்தாலும் கூட அக்கட்சிக்கு 17 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதாவது 70 லட்சம் வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், லோக்சபா தேர்தலில் சிரஞ்சீவி கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.