ராஜீவ் காந்தியின் 65வது பிறந்த நாள் - நாடெங்கும் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 65வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் சமாதியில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவரது குழந்தைகள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நல்லிணக்க நாளாக அனுசரிப்பு..
ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னையில் இன்று தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் ராஜீவ் காந்தியின் உருவப் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் கருணாநிதி ராஜீவ் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசித்தார்.
பின்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்கள், அரசு துறை உயரதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரும்ப சொல்லி உறுதி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் க.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் ஆவுடையப்பன், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.