வறட்சி: 1 கோடி டன் அரிசி உற்பத்தி குறையும் -பவார்
டெல்லி: ஏறக்குறைய நாட்டின் பாதி பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அரிசி உற்பத்தி இந்த காரிப் பருவத்தில், 1 கோடி டன் வரை குறையும். எனவே அரிசிக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ. 850லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் நடந்த மாநில உணவு அமைச்சர்கள் மாநாட்டில் சரத்பவார் பேசுகையில்,
10 மாநிலங்களில் உள்ள 246 மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது. இது மொத்த விவசாய நிலத்தில் 46 முதல் 47 சதவீதம். இதன் காரணமாக நெல் பயிரிடுவது கடந்த ஆண்டை விட சுமார் 1.4 கோடி ஏக்கர் அளவுக்கு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரிசி விளைச்சல் சுமார் 1 கோடி டன் வரை பாதிக்கப்படலாம்.
இதை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பயிர் செய்யத் தூண்டும் நோக்கத்திலும் நெல் பயிருக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த குறைந்தபட்ச கொள்முதல் விலையான ரூ. 850யை ரூ. 1000 ஆக உயர்த்தியுள்ளோம். இதன்மூலம் விவசாயிகளின் பயிர்களுக்கு உத்தரவாதம் தந்துள்ளோம்.
விலைவாசி கடுமையாக உயரும் பட்சத்தில் மத்திய அரசு தனது கையிருப்பில் வைத்திருக்கும் அரிசி மற்றும கோதுமைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். அதே நேரத்தில் ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை கிடைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
இதை தவிர்த்து எண்ணெய் விதைகள் மற்றும் கரும்பு விளைச்சலும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை வெகுவாக உயர்ந்துவிடும் என கூறப்படுகிறது. இதை தடுக்க கிலோ ரூ. 10 என்ற மானிய விலையிலும், ரேஷன் கடைகளில் பருப்புகள் வழங்குவதை செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் மில் அதிபர்கள் கொள்முதல் செய்யும் அரிசியில் பாதியை, ரேஷன் கடைகளுக்காக வரியாக வாங்க, மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆனால், கடந்த ஆண்டு கேரளா, தமிழகம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், இதை பின்பற்றவில்லை என்றார்.