அருணா கொலை-தேடப்பட்டவர் நெல்லையில் சரண்
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆறுமுகம் என்பவர் நேற்று நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம் ஆகிய மூன்று பேருக்கும் கடந்த 5ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும் இந்த வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா மற்றும் அழகர் ஆகியோரின் தண்டனைகள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து எஸ்ஏ ராஜா திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து பி்ன்னர் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் ஆஜர்ப்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
வேல்துரை போதை பொருள் கடத்திய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால் ஆறுமுகம் என்பவர் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆறுமுகம், நெல்லை நான்காவது மாஜிஸ்திரேட் முன் சரணடைந்தார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆறுமுகத்தை இன்று ஆஜர்படு்த்த நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.