குமரி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதல்-4 பேர் காயம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதி கொண்டதில் நான்கு பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்த ஜெரோம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று காலை 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் ராஜாக்கமங்கலத்தில் இருந்து 13 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நீரோட்டம் காரணமாக விசைப்படகு கடல் அலையில் முட்டம் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது.
அப்போது முட்டம் கடல் பகுதியில் இருக்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கட்டுமரங்களின் அருகில் விசைப்படகு சென்றதால் ஆத்திரமடைந்த முட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி மீனவர்கள் மீது வலையில் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகளை வீசி தாக்குதல நடத்தினர்.
இதில் விசைப்படகில் இருந்த புதுகிராமத்தை சேர்ந்த ஜான்சன், ராமேஸ்வரத்தை சேர்ந்த சுப்பிரமணியன், கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்த தாமஸ், டிசோ ஆகிய நான்கு மீனவர்கள் காயம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த மீனவர்கள் தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.