திருப்பதி-சுவாமி நகையை திருடி அடகு வைத்த அர்ச்சகர்
திருப்பதி: திருப்பதி கோவிலில் சுவாமியின் நகையைத் திருடி அடகு வைத்த தலைமை அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த ரெட்டி என்பவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தார். அதில், கடந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தான அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த 300 தங்க டாலர்கள் மாயமாகிவிட்டதாகவும், கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தங்க நகைகளில் மோசடி நடைபெற வாய்ப்புள்ளதாகவும்,
இதனால் காணிக்கையாக வந்த நகைகளின் மதிப்பை திருப்பதி தேவஸ்தானம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளின் முழு விவரத்தையும் திருப்பதி தேவஸ்தானம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டன
இதையடுத்து திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவில்களில் உள்ள நகைகள் கணக்கிடும் பணியில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோதண்ட ராமசாமி கோவிலுக்கு சொந்தமான நகைகளை தேவஸ்தான அதிகாரிகள் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு தலைமை அர்ச்சகராக உள்ள வெங்கட்ரமண தீட்சதர், அதிகாரிகளிடம் சென்று நான் 2 தங்கச் சங்கிலிகளை திருடி அடகுகடையில் வைத்துவிட்டேன் என்று கூறி அதிர்ச்சி தந்தார்.
இதையடுத்து திருமலை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
நான் 15 ஆண்டுகளுக்கும் மேல் திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். எனக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாத சம்பளமாக ரூ.3,000 மட்டும்தான் கிடைத்தது. இப்போதுதான் ரூ.10,000 தருகிறார்கள்.
எனக்கு 3 மகள்கள். 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தில் என்னிடம் இருந்த பணம் எல்லாம் செலவாகி விட்டது.
இந்நிலையில் எனக்கும், மனைவிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ செலவுக்காக கோதண்ட ராமசாமி சிலையின் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலிகளை திருடி அடகுகடையில் அடகு வைத்தேன்.
அந்த நகைகளை விரைவில் மீட்டு சாமியின் கழுத்தில் போட்டுவிட நினைத்திருந்தேன். அதிகாரிகள் திடீரென கணக்கெடுக்க வந்ததால் நானாகவே உண்மையை சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
நகை திருடிய அவரை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்ட் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications