ஆசிரியர்-ஆசிரியை காதல்..பார்த்த மாணவனுக்கு அடி: வழக்குப் பதிவு
தஞ்சாவூர்: காதலித்து வரும் ஆசிரியரும்-ஆசிரியையும் தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மாணவனைத் தாக்கிய 4 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையையடுத்த கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன்ராஜ் (14) அம்மன்பேட்டையில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தப் பள்ளியில் ஆசிரியராக உள்ள வெங்கடேசனும், உடன் பணியாற்றும் ஆசிரியையும் காதலித்து வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் அந்த ஆசிரியையுடன் தனியாக பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஜீவன்ராஜ் சென்றுள்ளான்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் வெங்கடேசன், ஏன் இந்தப் பக்கம் வந்தாய் என்று கேட்டு ஜீவன்ராஜை அடித்து உதைத்துள்ளார்.
மேலும் பிற ஆசிரியர்களான செந்தில், சாமிநாதன், பொன்னியின்செல்வன் ஆகியோரும் சேர்ந்து கொண்டு ஜீவன்ராஜை அடித்தனராம்.
இதில் காயமடைந்த மாணவனை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த அவனது தந்தை இது குறித்து போலீசிலும் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஆசிரியர்கள் வெங்கடேசன், செந்தில், சாமிநாதன், பொன்னியின்செல்வன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.