ஸ்வைன்-சென்னையில் 3வது பலி: நாடு முழுவதும் 50 பேர்
சென்னை: சென்னையி்ல் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் இந்த நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.
குரோம்பேட்டை ராதா நகரைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் இந்த நோய்க்குப் பலியானார். மூல நோய்க்கு சிகிச்சை பெற்று இவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு பலியானார்.
ஏற்கனவே சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிறுவன், நீலாங்கரையைச் சேர்ந்த மீனவர் ஆகியோர் பலியான நிலையில் இப்போது மூன்றாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.
இறந்த சேகர் மணமாகாதவர் ஆவார். தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.
சேகரின் உடலை வீட்டு்க்கு எடுத்துச் செல்லாமல் நேராக சுடுகாட்டுக்கு சென்று எரித்துவிட வேண்டும் என அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டனர்.
அங்கு அவரது உறவினர்கள் முகக் கவசங்கள் அணிந்து இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். இறுதி சடங்கு முடிந்ததும் சேகரின் உடல் எரியூட்டப்பட்டது.
இந் நிலையில் கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் மேலும் இருவரும் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளதால் இதுவரை இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர நேற்றும் இன்றும் இந்த நோய் அறிகுறியுடன் புதிதாக 159 பேர் நாடு முழுவதும் மருத்துவமனைகளி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியா முழுவதும் 2,539 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications