திண்டு்க்கல் டாக்டர் கொலை வழக்கு-சிபிசிஐடியிடம் 2 பேர் சி்க்கினர்
சென்னை: திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் பிடிபட்டுள்ளனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலையைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் (70) பழனி ரோட்டில் கிளினிக் வைத்திருந்தார். இவர் அப் பகுதி காஸ்மோபாலிட்டன் கிளப்பின் தலைவராகவும் இருந்தார். அவரது மனைவி வனிதா. இந்தத் தம்பதிக்கு சித்ரா, அனிதா ஆகிய மகள்களும், கணேசன் என்ற மகனும் உள்ளனர்.
பாஸ்கரன் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி காலை 5 மணிக்கு காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு டென்னிஸ் விளையாடச் சென்றபோது அவரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது.
இது குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடத்தல் நடந்த சில நாட்களுக்குப் பின் டாக்டரின் மனைவி வனிதாவுக்கு எஸ்எம்எஸ் மூலம் ரூ. 5 கோடி கேட்டு மிரட்டல் வந்தது. அடுத்தடுத்து வந்த எஸ்எம்எஸ்களில் ரூ. 5 கோடி தந்தால் அவரை விடுவிப்போம் என்று அந்தக் கும்பல் கூறியது.
இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்த நிலையில் மே மாதம் 10ம் தேதி பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் டாக்டர் பாஸ்கரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
முகம் முழுவதும் பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்டு மூச்சை திணறடித்து அவர் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
ஆனால் தனிப்படை போலீசாரால் கடத்தல் கும்பலை பிடிக்க முடியவில்லை. இது குறித்து எதிர்க் கட்சிகள் சட்டசபையிலும் கேள்வி எழுப்பியதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.
எஸ்.பி. அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட செல்போன் நம்பர்களை கொண்டு விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீசார் திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்தி, பழனியைச் சேர்ந்த உமர் ஆகிய இருவரை உடுமலைப்பேட்டையில் வைத்துப் பிடித்தனர்.
இவர்களை சென்னைக்குக் கொண்டு வந்துள்ள சிபிசிஐடி போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இந்தக் கடத்தலில் மேலும்10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து அவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.