பாஜகவிலிருந்து விலகினார் அத்வானியின் ஆலோசகர் சுதீந்திர குல்கர்னி
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரின் முக்கிய ஆலோசகரான பாஜகவின் சுதீந்திர குல்கர்னி, திடீர் என கட்சியை விட்டு ராஜினாமா செய்துள்ளார்.
கட்சிக்குள் விஸ்வரூபம் எடுத்து வெடித்துக் கொண்டிருக்கும் உட்கட்சிப் பூசலால் அதிருப்தி அடைந்துள்ள குல்கர்ன, கட்சியை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொள்கை வேறுபாடுகள் காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக குல்கர்னி தெரிவித்துள்ளார். வாஜ்பாயியின் மிக நெருங்கிய உதவியாளராக, ஆலோசகராக இருந்தவர் குல்கர்னி. அதேபோல அத்வானிக்கும் மிக நெருக்கமாக இருந்தவர்.
இந்த நிலையில் கொள்கை வேறுபாடுகள் காரணமாக பாஜகவிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார் குல்கர்னி. இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜகவுடனான எனது தொடர்புகளை முறித்துக் கொள்வது குறித்து நான் பல வாரங்களுக்கு முன்பே எடுத்து விட்டேன்.
எனது முடிவுக்கும், ஜஸ்வந்த் சிங் நீக்கத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. ஜஸ்வந்த் சிங் நீக்கம் துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம்.
கொள்கை வேறுபாடு காரணமாகவே கட்சியிலிருந்து விலகியுள்ளேன். கட்சியின் நலம் விரும்பியாக மட்டுமே நான் இனி தொடருவேன்.
அத்வானி மீதும், வாஜ்பாய் மீதும் நான் உயர்ந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அவர்களுடன் கடந்த 13 வருடங்களாக இணைந்து பணியாற்றி வந்துள்ளேன்.
இன்று முதல் நான் சுதந்திர மனிதனாகியுள்ளேன். எனது பணிகளை, என் எண்ணங்களையொத்த பிற கட்சியினருடன் இணைந்து தொடரவுள்ளேன் என்றார் அழர்.
ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்தவர் குல்கர்னி. பின்னர் வாஜ்பாயுடன் நெருக்கம் ஏற்படவே அவரது ஆட்சிக்காலத்தில், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். உரைகளை எழுதிக் கொடுப்பது, மீடியா ஆலோசகர் மற்றும் அரசியல் உதவியாளர் என்று பல்வேறு பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.
குல்கர்னியின் விலகல் குறித்து கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், குல்கர்னி ஒருபோதும் பாஜகவில் உறுப்பினராகக் கூட இருந்ததில்லை. அவர் கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. எனவே அவரது விலகலால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு கட்சியின் செயல்பாடுகளும், போக்கும்தான் காரணம் என்று முன்பு விமர்சித்திருந்தார் குல்கர்னி. தேர்தல் பிரசாரத்தின்போது மேற்கொள்ளப்பட்ட உத்திகள், பேச்சுக்களையும் அவர் விமர்சித்திருந்தார்.
குறிப்பாக வருண் காந்தியின் பேச்சை அவர் கடுமையாக சாடியிருந்தார். மேலும் சங் பரிவார் அமைப்புகளையும் அவர் சாடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications