விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது-ராஜா
தருமபுரி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விலைவாசி உயர்வு தேசிய அளவில் பொது பிரச்சனையாக மாறியுள்ளது. மத்திய அரசு விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இந்தியாவில் 177 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு தான் வறட்சிக்கு காரணம் என்பதை ஏற்க முடியாது.
பணவீக்கம் குறைந்த பிறகும் விலைவாசி குறையவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொது வினியோகத்துறையை வலுப்படுத்த வேண்டும். உலக பொருளாதார நெருக்கடியால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெருமளவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தாராளமய பொருளாதார கொள்கையே முக்கிய காரணமாகும்.
பாஜகவுக்கு நெருக்கடி...
பாஜக ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொள்கை ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பாஜக கரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறைக்கு ஆதரவான தீர்ப்பு என அத்வானி வரவேற்றார்.
ஐக்கிய முற்போக்கு அரசின் பொருளாதார சீர்திருத்த கொள்கைக்கு பாஜக ஒத்துழைப்பு தரும் என்று அக்கட்சி தெரிவித்தது. இதனால், காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே பொருளாதார கொள்கையில் வேறுபாடு எதுவும் இல்லை என தெரிகின்றது.
இந்தியாவில், உழைக்கும் மக்களுக்காகப் போராட இடது சாரிகளைத் தவிர வேறு யாரும் இல்லை என்றார்.