கறுப்புப் பணம்-அரசு நடவடிக்கை: பிரணாப்
டெல்லி: ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர் அனைவரது விவரங்களும் இந்திய அரசுக்கு தேவை. அதை தர மறுக்கும் ஸ்விஸ் வங்கியிடமிருந்து உரிய முறையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தங்கள் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை வெளியிட முடியாது என ஸ்விஸ் வங்கி இன்று அறிவித்திருந்தது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கருத்து கேட்க முனைந்தனர். அவர் தனது நார்த் பிளாக் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றபோது வழி மறித்த நிருபர்களிடம், "என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்... உரிய முறையில் இந்த விவகாரம் குறித்து ஸ்விஸ் வங்கியுடன் பேசுவோம். ஒரு தேசத்தின் நலனுக்காக இந்த விவரங்களை ஸ்விஸ் வங்கி இந்திய அரசுக்குத் தருவதுதான் சரியானது..." என்றார்.
இந்த விவரங்களைப் பெறுவது அத்தனை சுலபமானதல்ல. ஒரு போன் செய்து கேட்டதும் ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் விவரங்களைத் தந்துவிட மாட்டார்கள். அதில் இரு நாட்டு உறவுகள் மற்றும் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறுக்கிடுவதால், இந்திய அரசுக்கு ஒரேயடியாக தகவல் தரமாட்டேன் என ஸ்விஸ் வங்கியும் மறுத்துவிட முடியாது என்கிறார் நிதித்துறை அதிகாரி ஒருவர்.
இன்னொன்று சூழலுக்கேற்ப நெகிழும் தன்மை கொண்ட சட்ட விதிகளின் கீழ்தான் ஸ்விஸ் வங்கி உருவாக்கப்பட்டிருப்பதால், இந்திய அரசு உண்மையாகவே நெருக்கடி தரும்பட்சத்தில் அனைத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் விவரமும் தெரிந்துவிடும், என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.