வேட்டி, சேலை ஊழல் - மாஜி அமைச்சர் மதுசூதனன் விடுதலை
சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கியதில் ரூ. 12 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து மாஜி அதிமுக அமைச்சர் மதுசூதனன் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 1991-96ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஏழை, எளியோருக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
இதில், வேட்டி, சேலை வாங்கியதில் 12 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக முன்னாள் அமைச்சர் மதுசூதனன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நரசிம்மலு உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி கோர்ட், முன்னாள் அமைச்சர் மதுசூதனனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நரசிம்மலு உள்ளிட்ட நான்கு பேருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்தது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து மதுசூதனன், நரசிம்மலு உள்ளிட்ட ஆறு பேர் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுக்களை நீதிபதி ஜெயபால் விசாரித்தார்.
இன்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் மதுசூதனன் மீதான புகாருக்கு ஆதாரமில்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications