ஆந்திராவில் விற்கப்பட்ட மதுரை சிறுவர்கள்-ஆட்டோ டிரைவர் கைது
சென்னை: மதுரையைச் சேர்ந்த 3 சிறுவர்களை கடத்தி ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்ற ஆட்டோ டிரைவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை குழந்தைகள் நல்வாழ்வு குழுமத்தின் தலைவர் டாக்டர் மனோரமா, சிபிசிஐடி கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்திடம் கொடுத்த புகார் மனுவில்,
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மணிகண்டன் (11), அருணாச்சலம் (12), கண்ணன் (16) ஆகிய 3 சிறுவர்கள் அனாதையாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
அந்த சிறுவர்களை ஒரு கும்பல் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளது. ஆந்திராவில் அமங்கல் என்ற இடத்தில் இந்த சிறுவர்கள் கடந்த 6 மாதங்கள் கடும் சித்ரவதை அனுபவித்துள்ளனர்.
இந்த சிறுவர்களை முறுக்கு வியாபாரம் செய்ய பயன்படுத்தி உள்ளனர். தினமும் 15 மணி நேரம் வேலை செய்ய வைத்தும், உரிய உணவு கொடுக்காமலும் சித்ரவதை செய்துள்ளனர். இரும்பு கம்பியை காய்ச்சி, சூடு போட்டும் கொடுமைபடுத்தி உள்ளனர்.
கொடுமை தாங்காமல் இவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். இவர்களை கடத்தி விற்ற கும்பல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட அர்ச்சனா ராமசுந்தரம், இதற்காக தனிப்படையை அமைத்தார்.
இந்தப் படையின் விசாரணையில் சிறுவர்கள் 3 பேரையும் திருமங்கலம் இந்திராநகரைச் சேர்ந்த ரவிக்குமார் (29) என்ற ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்று ஆந்திராவில் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து ரவிக்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
அவரிடம் விசாரித்ததில் ஆந்திர மாநிலம் அமங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்த குமார்-ஜோதி தம்பதி தான் இந்தச் சிறுவர்களை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. இந்த தம்பதியையும் கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications