மோசடி வழக்கு- திருவாங்கூர் ராஜவைத்திய டாக்டருக்கு ஜாமீன்
சென்னை: ராஜ வைத்தியம் என்ற பெயரில் மான் கறி சிகிச்சை, புலிக்கறி சிகிச்சை என்று கூறி பல லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் விஜயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் விஜயக்குமார். திருவாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் சிகிச்சை மையத்தை நடத்தி வந்தார்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜ வைத்தியம் என்ற பெயரில் மான்கறி சிகிச்சை, புலிக்கறி சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகளை கொடுத்தார். சிக்சைக்காக இவர் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தார்.
இந்தநிலையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் பெண்ணிடம் ரூ.30 லட்சம் வாங்கினார். ஆனால் விஜயக்குமாரின் சிகிச்சை பலனளிக்கவில்லை.
இதையடுத்து அந்தப் பெண்மணி விஜயக்குமார் மீது போலீஸில் புகார் கொடுத்தார். தொடர்ந்து இவர் மீது சரமாரியாக புகார்கள் வரவே, போலீஸார், 14 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
விஜயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்சா, பாதிக்கப்பட்ட புகார்தாரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நஷ்ட ஈட்டை டாக்டர் விஜயக்குமார் வழங்க வேண்டும்.
வழக்கு விசாரணை முடியும்வரை ராஜவைத்திய மருத்துவமனையை திறக்கக்கூடாது.
தான் ஒரு டாக்டர் என்பதற்கான சான்றிதழை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் கொடுக்க வேண்டும். அதுவரை டாக்டர் தொழில் செய்யக்கூடாது.
ஜாமீனுக்காக ரூ.50 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications