கோவையில் உலக தரத்தில் மத்திய பல்கலை-ஸ்டாலின்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது
தமிழகத்தில் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் இல்லை . தமிழகத்தில் தான் பல்கலைக்கழகங்கள் பெருமளவில் உள்ளன. தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கென்று தனி பல்கலைக்கழகம் உள்ளது.
300 பேர் கொண்ட கிராமத்தில் ஒரு பள்ளியும், 3 மைல்களுக்கு ஒரு நடுநிலைப் பள்ளியும், 5 மைல்களுக்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும் இருக்க வேண்டும் என்று கர்மவீரர் காமராஜர் ஆசைப்பட்டார்.
அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்க பள்ளிகள் இருந்தன. ஆனால் இப்போது அது 30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 685 உயர் நிலைப் பள்ளிகள் தற்போது 2 ஆயிரத்து 200 உயர்நிலைப் பள்ளிகளாக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கல்வி பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
முன்பு உயர் கல்வி பெற வேண்டும் என்றால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்போது வெளிநாட்டு மாணவர்கள் தமிழகத்துக்கு வந்து கல்வி கற்கும் அளவிற்கு கல்வியின் தரம் உயர்ந்துள்ளது.
உலகத் தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் கோவையில் விரைவில் அமைய உள்ளது.
1967 ம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் 110 கல்லூரிகள் இருந்தன. அவை 1967 முதல் 1969 ம் வரை அந்த எண்ணிக்கை 188 -ஆக உயர்ந்தது.
இன்று தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள், 4 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட ஆயிரத்து 145 கல்லூரிகள் உயர் கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது என்றார்.