20,000 கிலோ வெளிநாட்டு துவரம் பருப்பு அழிப்பு
தூத்துக்குடி: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு கெட்டு போனதை அடுத்து அவை தூத்துக்குடி அருகே மணலில் புதைத்து அழிக்கப்பட்டது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து உடைக்காத துவரம் பருப்பு 4 சரக்கு பெட்டகங்களில் கப்பல் மூலம் வந்தது.
இந்த சரக்கு பெட்டகங்களை சுங்கத் துறையின் உணவுப் பொருள் சோதனைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு சரக்கு பெட்டகத்தில் 20 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு கெட்டுப் போய் விஷத்தன்மை உடையதாக மாறியிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். மற்ற 3 சரக்கு பெட்டகங்களிலும் இருந்த துவரம் பருப்பு நல்ல தரமுள்ளவையாக இருந்தது.
இதைத் தொடர்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில், அந்த சரக்கு பெட்டகம் லாரியில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெரிய குழி தோண்டி, அதில் துவரம் பருப்பை கொட்டி மணல் போட்டு மூடி அழித்தனர்.