2 மாணவர்களுக்கு ஸ்வைன்-வள்ளியூர் பள்ளிக்கு விடுமுறை
வள்ளியூர்: வள்ளியூரில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்ப்டடுள்ளது. இதையடுத்து பள்ளிக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஆணைக்குளம் பகுதியில் இருக்கம் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சமீபத்தில் விளையாட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வெளிநாட்டில் இருந்து சிலர் விருந்தாளிகளாக வந்து கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஒரே சமயத்தில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பன்றி காய்ச்சலாக இருக்குமோ என பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பயத்தில் உறைந்து போயினர்.
இதையடுத்து அந்த 40 மாணவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனை முடிவில் 38 மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற இரண்டு மாணவர்களுக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் வீட்டில் வைத்தே முறையான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதை அடுத்து அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.
மாணவர் வருகை மிகவும் குறைந்ததை அடுத்து அந்த பள்ளிக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பல மாணவர்கள் மற்றும் சாதாரண காய்ச்சல் உள்ளவர்களும் முக கவசம் அணிந்து நடமாடியதை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications