இலங்கைக்கு போலி விமான டிக்கெட்-2 பேர் கைது
திருச்சி: போலி விமான டிக்கெட் மூலம் இலங்கை செல்ல முயன்ற இரண்டு ஜவுளி வியாபாரிகளை திருச்சி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த விஜயன் (46) மற்றும் காரைக்குடி புதுசந்தை கீழ தெருவில வசிக்கும் ஜெயபால் (36) ஆகிய இருவரும் ஜவுளி வியாபாரம் செய்வதற்காக அடிக்கடி இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை, திருச்சி விமான நிலையத்திலிருந்து மிகின் லங்கா விமானம் மூலம், கொழும்பிற்கு செல்ல அவர்கள் தயாராகி கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரின் ஆவணங்களை குடியேற்ற அதிகாரி (பொறுப்பு) ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, கொழும்பு செல்வதற்கான டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் சரியாக இருந்தது. ஆனால், திரும்பி வருவதற்கான டிக்கெட் போலியானது என்பது ஆய்வில் தெரிந்தது.
இதனையடுத்து விஜயன், ஜெயபாலை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான டிராவல்ஸ் ஏஜென்சி அதிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications