கோவை, திருப்பூர் பந்த்-வாபஸ் பெற்ற இந்து முன்னணி
திருப்பூர்: விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கல்வீச்சு நடத்தப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் இன்று கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற இருந்த பந்த் விலக்கி கொள்ளப்பட்டது.
திருப்பூர், பிச்சம்பாளையம்புதூர் ஸ்ரீநகரில் கடந்த 25ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் சராமரியாக கல்வீசி தாக்கிக் கொண்டனர்.
பின்னர் விநாயகர் சிலையை கரைத்து விட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தவர்கள் மீது காங்கேயம் ரோடு, சிடிசி டிப்போ சந்திப்பில் 10 பேர் அடங்கிய கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவங்களை கண்டித்து, தாகுதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்து முன்னணி சார்பில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பந்த் போராட்டத்தை கைவிடுமாறு, இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் மற்றும் திருப்பூர் எம்.பி. சிவசாமி ஆகியோரிடம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. சாந்தி வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, பந்த் போராட்டம் கைவிடப்படுவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.