இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது நிரூபணம்-பாஜக
சென்னை: இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதை மத்திய அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம், மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது ராணுவத்திற்கு சக்தி வாய்ந்த பீஷ்மா டாங்கிகளை' தயாரித்தளித்து நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறது சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை. இது பாராட்டுக்குரிய செயல்.
பீஷ்மா டாங்கிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை தந்தது உண்மை. ஆனால் அவை இலங்கையின் தற்காப்புக்காக தரப்பட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த அல்ல என்று பேசியிருக்கிறார்.
இலங்கைக்கு எந்த எதிரி நாடும் இல்லை. அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குமானால் அவை பாரதத்திற்கு எதிராக பயன்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இலங்கைக்கு இந்தியாவால் தரப்படும் ஆயுதங்கள் எந்த நாட்டிற்கு எதிராக பயன்படப் போகிறது?
விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவதாகக் கூறிக்கொண்டு இலங்கையால் ஏவப்படும் இந்த ஆயுதங்கள் அங்குள்ள அப்பாவித் தமிழர்களை நோக்கித்தான் பாய்கிறது. இந்த அடிப்படை விஷயம்கூட தெரியாமல் அமைச்சர் பேசியிருப்பது வியப்பாக இருக்கிறது.
தங்களை தற்காத்துக் கொள்ள ஒன்று, எதிரிகளை தாக்க ஒன்று என இரண்டு ஆயுதங்களை ராணுவ வீரர்கள் எடுத்துச் செல்வதில்லை.
தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது என்ற உண்மை தற்போது அம்பலமாகியிருக்கிறது என்று கூறியுள்ளார் கணேசன்.












Click it and Unblock the Notifications