ஸ்டாலின்-மனைவி உடல் உறுப்புகள் தானம்!
உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு இயக்க துவக்க விழாவுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவரது மனைவி துர்கா குத்து விளக்கேற்றி இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர் துர்கா, தனது வாழ்க்கைக்கு பின் தனது உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக அறிவித்து அதற்கான உறுதிமொழிப் பத்திரம் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
அவரைத் தொடர்ந்து ஸ்டாலினும், தனது உடல் உறுப்புக்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
இவர்களைத் தொடர்ந்து 1,500 பேர் உறுப்புகள் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரங்களில் கையெழுத்திட்டனர்.
விழாவில் பேசிய ஸ்டாலின்,
உடல் உறுப்புகளை தானம் செய்வது இன்று நேற்றல்ல கடந்த கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. மன்னர்கள், நாயன்மார்கள் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
கண்ணப்ப நாயனார் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கியதாக புராணம் கூறுகிறது.
இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து வேறு ஒருவருக்கு பொருத்தி உயிர் வாழ வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகி்ன்றன.
2008 செப்டம்பர் மாதம் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த ஹிதேந்திரனுக்கு சாலை விபத்தில் மூளை சாவு ஏற்பட்டது. அவரது இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெங்களூரில் உள்ள ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சென்னை டாக்டர்களின் இந்த சாதனையை மறக்க முடியாது. அவரது பெற்றோரின் நற்செயலை நான் நேரில் பாராட்டினேன்.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கி வழி காட்டிய அவரது பெற்றோருக்கு சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி முதல்வர் கருணாநிதி கெளரவித்தார்.
அதே போல எல்.ஐ.சி. கிளை மேலாளர் ராமகிருஷ்ணன் மகள் சுகன்யாவுக்கு சாலை விபத்தில் மூளை சாவு ஏற்பட்டது. அவரது கண்கள், சிறு நீரகம் உள்பட 7 உறுப்புகள் எடுக்கப்பட்டு தேவையானர்களுக்கு பொருத்தப்பட்டது.
இது போல திருச்சியை சேர்ந்த வைத்தியநாதன் மகன் நிர்மல்குமாரின் இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், அகற்றப்பட்டு பலருக்கு பொருத்தப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.
உறுப்புகளை பலர் தானம் செய்ய முன் வந்தாலும் எப்படி வழங்குவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த இயக்கம் பயன்படும் என்றார்.