12 மணி நேரத்தில் அடுத்தடுத்து இந்தோனேசியா-சீனா-நியூசி.யில் நிலநடுக்கம்
ஜகர்த்தா: இன்று காலை வரை கடைசி 12 மணி நேரத்தில் வரிசையாக மூன்று நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் 6.9, சீனாவில் 6.2 மற்றும் நியூசிலாந்தில் 5.2 ரிக்டராகவும் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இன்று காலை சுமார் 6.21 மணிக்கு இந்தோனேசியாவின் சுலவசி மாகாணத்தில் திடீர் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக இருந்தது. இது சுலவசி பகுதியில் உள்ளபாவ் பாவ் தீவுக்கு 234 கிமீ தென் கிழக்கே மையம் கொண்டிருந்தது.
இது குறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறுகையில்,
இந்த பூகம்பகம் 670 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எதுவும் இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகவில்லை. ஆனால், இங்கிருந்து பல ஆயிரம் கிமீ தூரத்தில் இருக்கும் கிழக்கு திமோர்மக்களும் இந்த பூகம்பத்தை உணர்ந்தனர். அங்கிருந்த மக்கள் பீதியில் கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் நின்று கொண்டனர் என்கிறது.
சீனாவில் 6.2 ரிக்டர்...
இந்த பூகம்ப அதிர்வுகள் அடங்கவதற்குள் இன்று காலை 7.22 மணிக்கு மற்றொரு பூகம்பம் வட மேற்கு சீனாவை தாக்கியது. அது 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இது கின்காய் மாகாணத்தின் கோல்முட் நகருக்கு 165 கிமீ தென் கிழக்கே, சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நியூசிலாந்தில் மிதமான பூகம்பம்...
முன்னதாக நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனுக்கு அருகே நேற்று இரவு சுமார் 7.40 மணிக்கு 5.2 ரிக்டர் அளவு பூகம்பம் பதிவாகியுள்ளது. இது வெல்லிங்டன் நகருக்கு தெற்கே 20 கிமீ தூரத்தில், 30 கிமீ ஆழத்தில் மையமிட்டதாக தெரிகிறது.