50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 'குரங்கு' கிருஷ்ணா கைது
தஞ்சாவூர்: 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி குரங்கு கிருஷ்ணா எனப்படும் கிருஷ்ணா தஞ்சையில், கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டை இன்று பெங்களூர் மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடியாக முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தனது கூட்டாளிகளான லோகி என்கிற லோகேஷ், ருத்ரா, டோனி என்கிற தனியா ஆகியோருடன் பதுங்கியிருந்த குரங்கு கிருஷ்ணா சிக்கினார்.
இவர்களிடமிருந்து ஒரு கார், பணம், தங்க நகைகள், செல்போன்கள், பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதவிர ஏராளமான தொலைபேசி எண்கள் அடங்கிய ஒரு டைரியும் சிக்கியுள்ளது. அதில் பிரபல தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களின் தொலைபேசி எண்கள் உள்ளன.
குரங்கு கிருஷ்ணா மீது பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில், கொலை முயற்சி, கொலை, கடத்தல், வழிப்பறி, ஆள் கடத்தல், மிரட்டல் என 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதுகுறித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குரங்கு கிருஷ்ணா, தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், வர்த்தகர்களை மிரட்டிப் பணம் பறிப்பதை தொழிலாக கொண்டவன்.
இதுதவிர விபச்சாரப் பெண்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்தான்.
பெங்களூரில் உள்ள ஹெப்பால், எலஹங்கா, வித்யநாராயணபுரா, ஜாலஹள்ளி, அல்சூர் கேட், வயாலிகாவல், மகாலட்சுமி லேஅவுட், சதாசிவ நகர், ஹெப்பால், ஹனுமந்த் நகர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
வயாலிகாவல் காவல் நிலையத்தில் குரங்கு கிருஷ்ணா குறித்த முழு வரலாறும் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் இன்னொரு ரவுடிக் கும்பலின் தலைவனை கடத்திக் கொலை செய்ய கிருஷ்ணா கும்பல் திட்டமிட்டிருந்தது. இந்த வேலையைச் செய்ய தனது கூட்டாளி 'தூத்' ரவியை ஏவியிருந்தான் குரங்கு கிருஷ்ணா.
இருப்பினும் இந்தத் திட்டம் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து ஹனுமந்த் நகரில் உள்ள கெம்பே கெளடா மைதானத்திற்கு அருகே உள்ள ஒரு இடத்தை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் மூலம் கிருஷ்ணாவின் திட்டம் தடுக்கப்பட்டது.
அங்கு 9 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணா, தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரெய்டு நடத்தி நால்வரையும் கைது செய்தோம் என்றார்.
கைது செய்யப்பட்ட குரங்கு கிருஷ்ணாவும், அவரது கூட்டாளிகளும் பெங்களூர் கொண்டு செல்லப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications