சிபிஎஸ்இ: 10ம் வகுப்பு தேர்வு கட்டாயமில்லை - ஆலோசனைக் குழு ஒப்புதல்
டெல்லி: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பத்தாவது வகுப்புத் தேர்வு கட்டாயம் இல்லை என்ற முடிவுக்கு மத்திய கல்வி ஆலோசனை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தேர்வு செய்ய தனி அமைப்பை உருவாக்கவும் இந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பத்தாவது வகுப்புத் தேர்வை கட்டாயப்படுத்தாமல், விரும்பினால் எழுதலாம் என்ற திட்டத்தை மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருந்தார்.
அதன்படி, அதே பள்ளியில் பிளஸ் ஒன் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் பத்தாவது வகுப்புத் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை. வேறு பள்ளிக்குப் போக விரும்புவோர் மட்டும் தேர்வு எழுதினால் போதும் என்பதே கபில் சிபலின் திட்டம்.
இந்தத் திட்டம் மாநில கல்வித்துறை அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் பரிசீலனைக்கு விடப்பட்டது. இந்த வாரியம் இதுகுறித்து ஆலோசித்து கபில் சிபலின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து சிபல் கூறுகையில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாவது வகுப்புத் தேர்வு கட்டாயமில்லை என்ற திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், அதன் அடிப்படையில் மாநில அரசுகளும் இதை அமல்படுத்தலாம் என்றார்.
இதேபோல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்ய தனி அமைப்பை உருவாக்கவும் மத்திய கல்வி ஆலோசனை வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சிபல் கூறுகையில், இது ஒரு சுயேச்சையான அமைப்பாக செயல்படும். இதில் பல்துறை நிபுணர்கள், பிரபல கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவர். இந்த அமைப்பு, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரைக்கும் என்றார்.