மாஜி கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் மீது சொத்து குவிப்பு புகார்
சென்னை: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் சிக்கிய முன்னாள் கூடுதல் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் குவித்ததாக புகார் வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் சிக்கிய அப்போதைய கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தற்போது டெல்லியில் தமிழ்நாடு இல்ல உறைவிட கமிஷனராக இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவில், அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனின் உத்தரவைத் தொடர்ந்தே தடியடி நடத்தப்பட்டது என மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது அவர் சொத்து குவிப்பு புகார் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் உரிமை கழம் என்ற அமைப்பு இதுதொடர்பாக தலைமை செயலர் ஸ்ரீபதிக்கு புகார் அனுப்பியுள்ளது.
அதில், விஸ்வநாதன் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று ஸ்ரீபதி, உள்துறை செயலர் மாலதி உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆய்வு செய்தது.
அந்த குழுவினர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கொண்டதாகவும், விரைவில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் ஏ.கே விஸ்வநாதனிடம் இது குறி்தது முறையாக விசாரணை நடத்த உத்தரவிடுவது என முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இருப்பினும், இதுவரை தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் ஐஜி சுனில் தெரிவித்துள்ளார்.