வெள்ளை பன்றி கறி விற்பனையில் தொய்வில்லை-தமிழக அரசு
சென்னை: பன்றி காய்ச்சல் நோய் பீதி காரணமாக தமிழகத்தில் பன்றி கறி விற்பனை பாதிக்கப்படவில்லை. அவற்றின் விலை சிறப்பாக இருக்கிறது என தமிழக கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் முத்துகுமாரசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுன் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த நோயின் தாக்கம் வெகுவாக கட்டுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் யாக்ஷர் ரக வெள்ளை பன்றி கறி விற்பனை அமோகமாக இருப்பதாக தமிழக கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சி.முத்துகுமாரசாமி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பன்றிகளுக்கு நோயின் தாக்குதல் இருக்கிறதா? என்பதை அறிய முடிவு செய்தோம்.
அதன்படி தமிழகத்தில் இருக்கும் 11 அரசு பண்ணைகளில் உள்ள பன்றிகளின் உடலில் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவில் பன்றிகளுக்கு நோயின் தாக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு பண்ணைகளில் உள்ள பன்றிகள் விற்பனை சிறப்பாக இருக்கின்றது. சுமார் 500 கிகி வரை வளரும் யாக்ஷர் ரக பன்றிகளை மக்கள் வளர்ப்புக்காகவும் கறிக்காகவும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
தற்போதும் பன்றி கறி விற்பனை தொய்வில்லாமல் நடக்கின்றது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் காலையிலேயே விற்பனை ஆகிவிடுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications