தலித் ஊழியர்களை தாக்கியதாக பாமக எம்.எல்.ஏ மீது வழக்கு
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சுங்கச் சாவடியில் பணியாற்றும் தலித் ஊழியர்களை செருப்பைக் கொண்டு தாக்கியதாக பாமக எம்.எல்.ஏ தமிழரசு மீது போலீஸார் புகார் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டக் கவுண்டம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் எம்விஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுங்கச்சாவடி கட்டப்பட்டது.
இந்த சாவடி நிறுவப்பட்டது முதல் அதிமுக, பாமக போன்ற கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒப்பந்தத்தை மீறி நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு வெளியேயும் வாகனங்களிடம் சுங்கம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பாலமுருகன், செந்தில் ஆகியோரை எம்எல்ஏ தமிழரசு செருப்பால் அடித்ததாகக் கூறி, ஊழியர்களுக்கு ஆதரவாக கோட்டக் கவுண்டம்பட்டி மக்கள் சுங்கச்சாவடி அருகே திடீர் சாலை மறியல் நடத்தினர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மக்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அளித்த புகார் அளித்தனர். அதன் பேரில் ஓமலூர் பாமக எம்.எல்.ஏ. தமிழரசு மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், செருப்பால் அடித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த பிரச்னை குறித்து ஓமலூர் டிஎஸ்பி சந்தன பாண்டியன் எம்எல்ஏ தமிழரசுவிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், சுங்கச்சாவடி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications