ஈரோட்டில் கல்விக்கடன் முகாம்-கலெக்டர் அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உயர்கல்வி பெற மாணவர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும் என அம்மாவட்ட கலெக்டர் சுடலைகண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கை,
கிராமம் மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கல்வி கடன் பெற பஞ்சாயத்து யூனியன் அளவில் முகாம் நடக்கிறது.
வரும் 7ம் தேதி ஈரோடு மற்றும் மொடக்குறிச்சி யூனியன்களை சேர்ந்தவர்களுக்கு ஈரோடு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் முகாம் நடக்கிறது.
கொடுமுடி யூனியனை சேர்ந்தவர்களுக்கு 8ம் தேதியும், சென்னிமலை மற்றும் பெருந்துறை யூனியனை சேர்ந்தவர்களுக்கு 9ம் தேதி சென்னிமலையிலும், பவானி, அந்தியூர் யூனியனை சேர்ந்தவர்களுக்கு 10ம் தேதி பவானியிலும் முகாம் நடக்கிறது.
அதே போன்று, அம்மாபேட்டை யூனியனை சேர்ந்தவர்களுக்கு 11ம் தேதியும், கோபி செட்டிபாளையத்தை, தூக்கநாயக்கன்பாளையம் யூனியனை சேர்ந்தவர்களுக்கு 14ம் தேதி கோபிசெட்டிபாளையத்திலும் கல்விக்கடன் முகாம் நடக்கிறது.
நம்பியூரை சேர்ந்தவர்களுக்கு 15ம் தேதி நம்பியூரிலும், தாளவாடியை சேர்ந்தவர்களுக்கு 18ம் தேதி தாளவாடியிலும், சத்தி மற்றும் பவானிசாகர் யூனியனை சேர்ந்தவர்களுக்கு 23ம் தேதி சத்தியிலும் கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது.
கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் மனுவுடன், ரேஷன் கார்டு, கடைசியாக எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ், தற்போது சேர்ந்துள்ள கல்லூரியின் கட்டண சான்று ஆகியவற்றின் ஜெராக்ஸ் நகலை எடுத்து வர வேண்டும். இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.