ரஷ்யா கிளம்பினார் பிரதீபா - தஜகிஸ்தானும் செல்கிறார்

அமெரிக்கா, தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உதவி வரும் நிலையில் பிரதிபாவின் இந்த சுற்றுப்பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் பிரதீபா மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது தான்.
இன்று ரஷ்யா செல்லும் அவர் அங்கு அந்நாட்டு பிரதமர் விளாடிமிர் புடின், அதிபர் டிமிட்ரி மெத்வேதவ் ஆகியோரை மாஸ்கோவில் சந்திக்கிறார்.
பின்னர் அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு செல்கிறார். அங்கிருந்து தஜகிஸ்தான் தலைநகர் துஷான்பேக்கு சென்று, அதிபர் எமோமோலி ரஹ்மோனை சந்திக்கிறார். வரும் 8ம் தேதி மீண்டும் இந்தியா திரும்புகிறார்.
அவருடன் அவரது புதிய செயலாளர் நிருபமா ராவ், பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பனபாகா லட்சுமி, வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரிகள் ஆகியோரும் சென்றுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்கள் குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பு குறித்து இந்தியா பல முறை எடுத்து கூறியும் அமெரிக்கா, பாகிஸ்தானை கண்டிக்காமல் விட்டது, பின்னர் அந்நாட்டுக்கு 500 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உதவி வழங்கியது போன்றவை மன்மோகன் அரசுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்திய அரசு மாறி வரும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களது பழைய நண்பரான ரஷ்யாவின் உதவியை நாடுவதாகவும், அதற்காக தான் பிரதிபாவின் இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் எல்லைகளை கொண்டுள்ள தஜகிஸ்தானுக்கும் அவர் செல்லவிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்தியா, ரஷ்யா மற்றும் தஜகிஸ்தானுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவின் நட்பை விரும்பும் தஜகிஸ்தான் அதிபர் எமோமோலி ரஹ்மோன் இதுவரை நான்கு முறை இந்தியா வந்துள்ளார். ஆனால், இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அந்நாட்டுக்கு போவது இதுவே முதல் முறை.












Click it and Unblock the Notifications