நலவாரிய முறைகேடு-தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
திருச்சி: முறை சாரா தொழிலாளர் நல வாரிய முறைகேடுகளைக் கண்டித்து, திருச்சியில் சிஐடியு தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பல்வேறு முறைகேடுகள் நீடிக்கின்றன.
தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் முறையாக வழங்கப்படாத நிலையும், அலைக்கழிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கு சிஐடியு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து திருச்சி காஜாநகர் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் முன்பு இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். முற்றுகை போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழுத் தலைவர் கே. பாலபாரதி எம்எல்ஏ துவக்கி வைத்து பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நல வாரிய அலுவலகங்களிலும் லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் பெருகி வருகின்றது.
திருச்சி மாவட்டத்தில் காணாமல் போனதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான கேட்பு மனு நலவாரிய அட்டைகள் கண்டறிந்து வழங்க வேண்டும். புதிய பதிவுக்கான மனுக்களில் விஏஓவிடம் கையெழுத்து வாங்கச் சொல்லி மாதக்கணக்கில் அதிகாரிகள் இழுத்தடிப்பதை கண்டிக்கின்றோம் என்றார்.