ஈழப் போரில் உயிர் தப்பி சென்னை வந்து பிரசவித்த தமிழ்ப் பெண்
கிளிநொச்சியைச் சேர்ந்தவர் வேலன்டினா. 34 வயதாகும் இவரது கணவர் சிவரூபன். காதல் மணம் புரிந்தவர்கள் இந்தத் தம்பதியர். இவர்களுக்கு ஹம்சாலினி என்ற 2 வயதுக் குழந்தை இருந்தது.
குழந்தையை சிறப்பாக வளர்க்க வேண்டும், வாழ்வில் பெரிய அளவுக்குப் போக வேண்டும் என்ற கனவுகளுடன் வாழந்த இந்திய அழகிய குடும்பத்தை குண்டு போட்டு சிதைத்து விட்டது இலங்கை ராணுவம்.
கிளிநொச்சியில் நடந்த தாக்குதலின்போது இலங்கை வான்படை வீசிய குண்டு ஹம்சாலியின் உடலை சிதறடித்து சிவரூபன்-வேலன்டினா தம்பதியினரை உருக்குலைத்து விட்டது. அப்போது வேலன்டினா கர்ப்பிணியாக இருந்தார்.
அவரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தார். இந்த நிலையில் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காப்பதற்காக தனது கணவருடன் விமானம் மூலம் சென்னை வந்தார்.
அரும்பாக்கத்தில் வீட்டைப் பிடித்து தங்கினர். அங்குள்ள அப்பாசாமி மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றனர். அப்போது கருப்பையில், 4 கிலோ அளவுக்கு பெரிய கட்டி இருந்தது தெரிய வந்தது.
இப்படி கருவுடனும், கருப்பையில் கட்டியுடனும் சிரமப்பட்டார் வேலன்டினா. இருந்தாலும் அவரது மன திடம் அந்த வலியைத் தாண்டி நின்றது.
மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்த வேலன்டினாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் அவரது கருப்பையில் இருந்த கட்டியையும் டாக்டர் சுமதி தலைமையிலான மருத்துவக் குழு வெற்றிகரமாக அகற்றி விட்டது.
முதல் குழந்தை இறந்த சோகத்தில் இருந்த சிவரூபன் - வேலன்டினா தம்பதிக்கு 2வது குழந்தை பிறந்த நாள் மிகப் பெரிய சந்தோஷ நாளாகியுள்ளது. காரணம், ஹம்சாலினியின் பிறந்த நாள் ஜூலை 22ம் தேதியாகும். அதற்கு முதல் நாள்தான் 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தங்களது முதல் மகளே, 2வது மகளாக வந்துள்ளதாக பூரிப்படைந்துள்ளனர் சிவரூபன்- வேலன்டினா தம்பதியினர்.
சுற்றுலா விசாவில்தான் இருவரும் சென்னைக்கு வந்துள்ளனராம். எனவே விரைவில் மீண்டும் இலங்கைக்கே திரும்பிச் செல்லவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகிழ்ச்சியான தருணத்தில் இருந்த சிவரூபன் இலங்கையில் தற்போதைய நிலை குறித்து கேட்டால், இந்திய அரசாங்கம் ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்தோம், லட்சக்கணக்கான மக்கள் செத்து விட்டனர். எல்லாம் முடிந்து விட்டது. இனி எதை சொல்லியும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று விரக்தியுடன் கூறினார்.