விவசாயிகளின் நண்பன் டாக்டர் ராஜசேகர ரெட்டி!
ஒய்எஸ்ஆர் என்றும் கடப்பா மாவீரன் என்றும் ஆந்திர காங்கிரஸாரால் அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி கடந்த 1949 ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி கடப்பாவில் உள்ள புலிவெண்டுலு எனும் இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் ராஜா - ஜெயம்மா.
ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ராஜசேகர ரெட்டி, குல்பர்கா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்து எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். எஸ்வி மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ்சர்ஜனாக சில காலம் பணியாற்றினார். பின்னர் தான் பிறந்த புலிவெண்டுலுவில் ஒரு மருத்துவமனை அமைத்து மருத்துவப் பணி செய்தார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் அரசியலில் அடியெடுத்து வைத்தார்.
மிகத் துடிப்பான இளைஞரான இவரை 1980-83ல் ஆந்திர மாநில கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக நியமித்தது காங்கிரஸ் ஆட்சி. கர்நாடாகவிலுள்ள துங்கபத்திரா நதியிலிருந்து, புலிவெண்டுலு கிளை கால்வாயில் தண்ணீர் பெற்றுத் தந்தது இவரை அரசியலில் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையாக அமைந்தது.
கடப்பா மக்களவை தொகுதியிலிருந்து அவர் நான்கு முறை தேர்வானார். புலிவெண்டுலு சட்டசபை தொகுதியிலிருந்து ஆறு முறை தேர்வாகியிருக்கிறார்.
1983-1985 மற்றும் 1998 - 2000 ஆகிய காலங்களில் ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கடந்த 2003ல், தெலுங்கு தேசம் சார்பில், முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவர் மூன்று மாதத்தில் 1,400 கி.மீ., தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்திய அரசியலில் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியானது. பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் அதிகப் பகுதிகளுக்கு இந்த பாதயாத்திரையின் போது சென்றார்.
ஆந்திரா முழுக்க வறட்சியும், ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகளுமாக பேரவலம் நிகழ்ந்த காலகட்டத்தில் அவரது இந்தப் பயணம் மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது. காங்கிரஸ் ஆட்சியமையும்போது இந்த தற்கொலைகள் முற்றிலும் இல்லாது போகும் என வாக்களித்தார் ரெட்டி.
அதற்கடுத்த ஆண்டில் நடந்த தேர்தலில், கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு இந்த பாதயாத்திரைதான் முக்கிய காரணமாக அமைந்தது. முதல்வரானதும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தார். அதற்கு முன்பு வரை சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கடுமையான மின்கட்டண நெருக்கடியில் மக்கள் தவித்தனர்.
அதுமட்டுமல்ல... கிடப்பில் இருந்த 70 நீர்ப்பாசன வசதிகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். நெல் கொள்முதல் விலையையும் உயர்த்தினார். சிறு தொழில் நடத்துவோருக்கு சிறப்புச் சலுகைகள், சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவு, ஏழைகளுக்கு உதவிகள் உள்ளிட்ட நலத் திட்டங்களை தொடர்ந்து அறிவித்தார்.
இந்தியா மட்டுமல்ல... ஒட்டுமொத்த ஆந்திராவே விவசாயத்தைதான் நம்பி வாழ்கிறது என அழுத்தமாகக் கூறிய ராஜசேகர ரெட்டி, விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளித்தார். அதே நேரம் ஐடி மாநிலம் என்று ஆந்திரா பெற்றிருந்த பெயரையும் இழக்க விரும்பாமல் சாமர்த்தியமாக பேலன்ஸ் செய்தார்.
இதன்பலன், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் துமத்தினாலும் அவற்றை மக்கள் புறந்தள்ளி அவரை தொடர்ந்து வெற்றி பெற வைத்தனர்.
ராஜசேகர ரெட்டியின் மனைவி பெயர் விஜயலட்சுமி. ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி என்ற மகனும், ஷர்மிளா எனும் மகளும் அவருக்கு உள்ளனர்.
மிகத் துடிப்பான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணம் ஆந்திராவுக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications