மும்பை விமானத்தில் தீ-215 பயணிகள் தப்பினர்
மும்பை: மும்பையில் இருந்து ரியாத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ ஏற்பட்டது. இது உடனடியாக கவனிக்கப்பட்டதை அடுத்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 215 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு சவுதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு கோனர்க் என்று பெயரிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்பியது.
215 பயணிகளுடன் ரன்வேயில் ஓடத் துவங்கிய போது விமானத்தின் ஒரு என்ஜினில் தீ பிடித்து புகை வருவதை விமான நிலைய அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். இதையடுத்து விமானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் வேகம், வேகமாக விமானத்தில் இறக்கப்பட்டனர். பின்னர் அந்த என்ஜினில் இருந்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதையடுத்து மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டு 215 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஜிதேந்திர பார்கவா கூறுகையில்,
தீ உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு விபத்து தடுக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இன்று ரியாத் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications