பன்றிக் காய்ச்சல்-பெங்களூரில் மேலும் 4 பேர் பலி- இதுவரை 112 பேர் சாவு
பெங்களூர்: பன்றிக் காய்ச்சலுக்கு பெங்களூரில் மேலும் நான்கு பேர் பலியாகியிருப்பதை நேற்று சுகாதார துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த நோய்க்கு பலியானவர்களி்ன் எண்ணிக்கை கர்நாடகாவில் 35 ஆகவும், இந்தியாவி்ல் 112 ஆகவும் அதிகரித்துள்ளது.
பன்றி காய்ச்சல் நோய் இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவும், பெங்களூரும் அதிக மக்களை பலி கொடுத்துள்ளது.
இந்நிலையில் நேற்று பெங்களூரில் மேலும் நான்கு பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநில சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடந்த 1ம் தேதி அரசு மருத்துவமனையி்ல் 38 வயதான பெண்ணும், 31 வயதான ஆணும் மரணமடைந்தார்கள். 2ம் தேதி 27 வயது வாலிபரும், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி 41 வயது நபரும் இறந்தார்கள். ஆனால், இவர்களுடைய சோதனை முடிவுகள் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது அவர்கள் பன்றி காய்ச்சல் காரணமாக பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
கர்நாடகாவில் 35...
இதையடுத்து கர்நாடகாவில் இந்த காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று பெங்களூரில் 19 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இங்கு இந்த நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 112...
இந்தியாவில் முழுவதுமாக நேற்று வரை 112 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 57 பேர். கர்நாடாகா 35, குஜராத் 8, தமிழ்நாடு, டெல்லி தலா 3, கேரளா, ஆந்திரா தலா 2, கோவா, சட்டீஸ்கர் மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.
அதே நேரத்தில் உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 270 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில் பிரேசில் (657), அமெரிக்கா (575), அர்ஜென்டினா (465) ஆகியவை உள்ளன.












Click it and Unblock the Notifications