அசாம் உள்ளிட்ட 4 வட கிழக்கு மாநிலங்களில் பூகம்பம்-5.9 ரிக்டர்
கௌகாத்தி: அசாம் உள்ளிட்ட நான்கு வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை சுமார் 5.9 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய 7 மாநிலங்களும் பூகம்பம் அதிகம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன.
உலக அளவில் அதிக பூகம்பம் ஏற்படும் இடங்களில் இந்த மாநிலங்களுக்கு 6வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 1.21 மணிக்கு அசாம், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுராவில் வீடுகள் குலுங்கின.
சுமார் 10 வினாடிகள் நீடித்த இந்த பூகம்பத்தால் தூங்கி கொண்டிருந்த மக்கள் பாதி தூக்கத்தில் எழுந்து அலறியடித்து தெருவுக்கு ஓடினர்.
இந்த பூகம்பம் மேலாயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள பூகம்ப ஆய்வு நிலையத்தில் 5.9 ஆக பதிவாகியிருந்தது. இது மியான்மர் எல்லை பகுதியில் மணிப்பூர் மற்றும் நாகலாந்துக்கு இடையே மையம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. இது கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் ஏற்படும் நான்காவது பூகம்பம். முன்னதாக கடந்த 31ம் தேதி 5.3, 19ம் தேதி 4.9, 11ம் தேதி 5.6 அளவு பூகம்பங்கள் ஏற்பட்டிருந்தன.