சிறார் சீர்திருத்த பள்ளியில் ஓரினச் சேர்க்கை - விசாரணைக்கு உத்தரவு
தஞ்சை: சிறுவர் சிறையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி, ஊழியர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குறித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டனாக இருந்தவர் முனுசாமி. இங்கு உள்ள 6 சிறுவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி சிறை வார்டன் முனுசாமியை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில், அவர் இறந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி, அவரது மகன் கார்த்திகேயன் உயர் நீதி மன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், சிறுவர் சிறையில் உள்ள சிறுவர்களுடன் ஊழியர்கள் ஓரினச்சேர்க்கை தொடர்பு வைத்துள்ளனர் என்று கொலை செய்யப்படுவதற்கு முன்பு எனது தந்தை என்னிடம் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் காமராஜ், சிட்டிபாபு, ரத்தினம், கணபதி ஆகியோர்தான் சிறுவர்களை தூண்டிவிட்டு, என் தந்தையை கொலை செய்துள்ளனர். எனவே, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த உத்தரவில்,
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை. சிறுவர் சீர்த்திருத்த சட்டப்படி, சிறுவர் சீர்திருப் பள்ளிகளில் அடைக்கப்படுவோருக்கு போதுமான பாதுகாப்பு, கல்வி, மறுவாழ்வு வழங்க வேண்டும்.
மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க அரசு பிரதிநிதி, சமூக ஆர்வலர், குழந்தைகள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவை சமூகநலத்துறை செயலாளர் அமைக்க வேண்டும்.
அந்த குழு 6 மாதத்தில் விசாரித்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.